Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நான் கிரிக்கெட்டுக்கு வந்தது ஒரு விபத்து: கங்குலி

மே 31, 2020 09:10

கொல்கத்தா: தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து அனைவரது கவனத்தையும் கவர்ந்த கங்குலி, கிரிக்கெட்டிற்கு தான் வந்தது ஒரு விபத்து என்று பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து உலகமே ஸ்தம்பித்துள்ளது. அனைத்து விளையாட்டு போட்டிகளும், வீரர்களும் முடங்கியுள்ளனர். இந்நிலையில் நேரலை நிகழ்வு ஒன்றில் பேசிய சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளதாவது:

சர்வதேச அளவில் விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து அல்லது ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் விளையாட்டு வீரர்களும் தங்களது வீடுகளில் முடங்கியுள்ளனர். உலகமே ஒரு மயான அமைதியை கடைபிடித்து வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

கொரோனாவால் சர்வதேச விளையாட்டு போட்டிகள் முடங்கியுள்ள நிலையில், இன்னும் 6 -7 மாதங்களில் அதற்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டால் அனைத்தும் சரியாகிவிடும். உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால், அது மஞ்சள் காமாலை, காய்ச்சல் போல சாதாரணமாக மாறிவிடும் என்றும் மக்களின் வாழ்க்கையும் இயல்புநிலைக்கு திரும்பிவிடும். 

அப்போது காய்ச்சல் போன்றவற்றிற்கு மருந்து எடுத்துக் கொள்வதை போல கொரோனா பாதிப்பிற்கும் மருந்து எடுத்துக்கொண்டால் அது சரியாகிவிடும். கிரிக்கெட் போட்டிகளும் இயல்புநிலைக்கு திரும்பிவிடும். கிரிக்கெட்டின் காலஅட்டவணைகளில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று
தெரிவித்துள்ள கங்குலி, கிரிக்கெட்டை இயல்புநிலைக்கு கொண்டுவர பி.சி.சி.ஐ. மற்றும் ஐ.சி.சி. பிரம்ம பிரயத்தனம் செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து அனைவரது கவனத்தையும் கவர்ந்த கங்குலி, கிரிக்கெட்டிற்கு தான் வந்தது ஒரு விபத்து என்று தெரிவித்துள்ளார். தான் 9ம் வகுப்பு படித்தபோது கால்பந்தாட்டத்தில் சிறந்து விளங்கியதாகவும், தன்னுடைய தந்தையின் அறிவுறுத்தலின் பேரில்தான் கிரிக்கெட்டிற்குள் நுழைந்ததாகவும் அதன்பிறகு தன்னுடைய வாழ்க்கையே திசைமாறியது.

தன்னுடைய பெற்றோர் மற்றும் சகோதரர்கள் மிகுந்த கட்டுப்பாடு கொண்டவர்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்க தனக்கு கிரிக்கெட் பயிற்சிகள் உதவியதாகவும் அதற்காகவே பயிற்சி வகுப்புகளுக்கு தொடர்ந்து சென்றதாகவும் கங்குலி குறிப்பிட்டுள்ளார். மேலும் கபில்தேவ் தலைமையிலான அணி 1983ல் உலக கோப்பையை வென்றது தனக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளித்தது. இவ்வாறு சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்